Monday, January 25, 2010

குழந்தைகளும் வீடியோ கேம்ஸும்


இன்று வெளியில் விளையாடும் விளையாட்டுக்கள் எல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டது. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடினால் கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொண்டு விடுவார்கள் என்று விளையாடக் கூட பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. அதனால் குழந்தைகளுக்குள் கூடி விளையாடுவது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து விளையாடுவது எல்லாம் குறைந்து விட்டது. கிராமங்களில் மட்டும் வளரும் குழந்தைகளிடம் கூடி விளையாடும் பழக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தெருக்களில் விளையாடும் கோலி, பம்பரம், கில்லி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து கொண்டிருக்கிறது. இந்த மூன்று விளையாட்டையும் கிரிக்கெட் ஆக்கிரமித்துக் கொண்டது. அதுவும் வாரத்தில் என்றோ ஒரு நாள். சமீபத்தில் வீடியோ கேம்ஸ் எனப்படும் எக்ஸ்-பாக்ஸ்(XBOX 360), வீ(Wii) மற்றும் பிஎஸ்த்ரீ(PS3) என்று பெரியர்வர்கள்(Adults) விளையாடும் வீடியோ கேமும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பிஎஸ்-நிண்டெண்டோ(PS Nintendo) எனப்படும் கையடக்க வீடியோ கேமும் தான் விளையாட்டு உலகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். 7லிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகள் இந்த கையடக்க வீடியோ கேமில் விளையாடும் பொழுது இந்த உலகத்தையே மறந்து விடுகிறார்கள். குடும்பதில் இருப்பவர்களிடமோ, அடுத்தவர்களிடமோ பேசுவதை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பதை சில ஆய்வுகள் சொல்கிறது. தனிமை விரும்பிகளாக அவர்கள் மாறிப் போவது காலத்தின் கோலமென்று சொல்லாமல் வேறென்ன சொல்வது.

போன வருடம் ஒரு நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் புதிதாக வீ (Wii)வாங்கியிருந்தார், நான் அப்பொழுது தான் முதன் முதலில் வீ யைப் பார்க்கிறேன். அவரிடம் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். அவர் அதை டீவியில் எப்படி இணைத்துக் கொள்வது, அதில் என்னவெல்லாம் விளையாடலாம் என்று விவரித்துக் கொண்டிருந்தார். என் மகள் இதெல்லாம் ரெம்ப பழசு, நான் இதை பலமுறை நண்பர்கள் வீட்டில் விளையாடியிருக்கிறேன் என்று அதிலுள்ள அத்தனை விளையாட்டுக்களையும் விலாவாரியாக எங்களுக்குச் சொன்னாள். நாங்கள் இருவரும் மலைத்துப் போய் கேட்டுக்கொண்டிருந்தோம். அதோடு மட்டுமில்லாமல் அவர் கோல்ஃப்(Golf) எப்படி விளையாடுவது என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்ன ஒரே அட்வைஸ் கோல்ஃப் என்பது ஒரு மைண்ட் கண்ட்ரோல் கேம். இதில் டெஸிஷன்(Decision) தான் முக்கியம். நானும் முயன்ற வரை முயற்சி செய்தேன். ஒன்று நான் அழுத்திய(Remote) வேகத்தில் மிகத் தொலைவில் பந்து விழுந்துவிடும் இல்லையேல் வேறு திசை நோக்கிச் சென்றுவிடும். நமக்குத்தான் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டே ஒத்துவராதே. கடைசியில் என் மகள் கையில் ரிமோட் கண்ட்ரோல் சென்றது. நீங்கள் நம்ப மாட்டீர்கள். 5 நிமிடத்தில் 4 பார்களை(Par) முடித்துவிட்டு போர் அடிக்கிறது என்று கொடுத்து விட்டுச் சென்று விட்டாள். எந்த அளவுக்கு இந்த வீடியோ கேம்கள் குழந்தைகளை ஈர்க்கிறது என்பதை அப்பொழுது தான் தெரிந்துக் கொண்டேன்.

குழந்தைகளுக்கென்றே விதம் விதமாக யோசித்து விளையாட்டுகளைத் தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள், குழந்தைகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன. இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தில் வன்முறை நடத்தை அதிகரிக்கிறது. விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு என்பது தான் நம் மூளையில் உறைந்திருக்கிறது. அன்போ, நன்றியோ, ஈரமோ, வீரமோ எதுவாக இருந்தாலும் குழந்தைகள் தங்கள் விளையாட்டுகள் மூலமே கற்றுக்கொள்கிறார்கள். ஆடுவதற்குப் பெயர் தான் விளையாட்டு. நாமோ விளையாட்டைப் பார்க்கிற விஷயமாக மாற்றி விட்டோம். ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது. மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம்.
ஹாலிவுட்டில் வெளிவரும் ஒரு படம் ஹிட் ஆனால் அந்த படத்தின் டிவீடி வெளிவரும் பொழுது கூடவே அந்த படத்தின் கேரக்டரைக் கொண்டு வீடியோ கேமிற்கான டீவீடியும் வெளிவந்து விடும். வீடியோ லைப்ரரியில் பார்த்தால் அதற்கென்றே ஒரு செக்‌ஷன் தனியாக இருக்கும். அதில் எக்ஸ்-பாக்ஸில் விளையாடுவதற்கு தனி வீடியோ டிவீடியும், பிஎஸ்த்ரியில் விளையடுவதற்கு தனி டிவீடி வேறு. உலகெங்கும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் 007 ஜேம்ஸ் பாண்ட், இப்போது வீடியோ மூலமாகவும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பியர்ஸ் பிராஸ்னன் உருவத்தை வைத்து இந்த வீடியோ கேம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை வீடியோ கேம்ஸ் நிறைய வந்து விட்டது. ஒரிஜினல் பியர்ஸ் குரலுடன், படத்தில் இருப்பதைப் போன்ற ஆக்ஷன், அதிரடிக் காட்சிகளுக்கு இதில் பஞ்சமே இல்லையாம். படத்தில் கூட இடம் பெறாத பல அதிரடி வசனங்களும் இந்த வீடியோ கேம்ஸில் இடம் பெற்றுள்ளதாம். முழு நீளப் படத்தைப் பார்க்கும் அதே திரில், திருப்தி, தில் இந்த வீடியோவிலும் நீக்கமற நிறைந்துள்ளதால் ஹிட் ஆகியுள்ளது.

மேலும் சில ஆய்வுகள்

1. அமெரிக்காவின் இன்டியானா பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆஃப் மெடிசன், வன்முறை நிறைந்த வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வுக் குழுவினர் இரண்டு விதமான வீடியோ விளையாட்டுகளை ஆய்விற்கு உட்படுத்தினார்கள். முதல் ஒன்று Need for Speed Underground என்பது. இதில் வேகம் இருக்கும். வன்முறை இருக்காது. அடுத்தது Medal of Honour Frontline . இது வன்முறை நிறைந்தது. ஆய்வுக் குழுவினர் 44 இளம் வயதுப் பிள்ளைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து ஆய்வில் பயன்படுத்தினார்கள். விளையாடி முடித்ததுமே பிள்ளைகளின் மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. வன்முறை விளையாட்டை விளையாடிய பிள்ளைகளின் மூளை காட்டிய நெகட்டிவ் விளைவு, மற்றொரு விளையாட்டை விளையாடிய பிள்ளைகளிடம் இல்லை.

2. சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது. இது 18+ என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பெற்றோர்கள் உணர்கின்றனர்.

3. வீடியோ கேம் விளையாட்டில் பைத்தியமாக ஈடுபடுவது குழந்தைகள் மட்டும் தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு; அதிக பட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் கணிசமான பேர் வீடியோ கேம் பைத்தியமாகத்தான் உள்ளனர். அதனால் தான் ஒபிசிட்டி, சாப்பிடுவதில் பிரச்னை, தூங்குவதில் சிக்கல் எல்லாம்; ஆனால், குழந்தைகள் மட்டுமின்றி, 35 வயது வரை உள்ளவர்களும் இதற்கு அடிமையாக உள்ளனர். இவர்களுக்கு தான் அதிக உடல் கோளாறு வரும். பெரும்பாலோருக்கு டிப்ரஷன் ஏற்படும்' என்று அமெரிக்க ப்ரிவென்டிவ் மெடிசன் இதழில் கூறப்பட்டுள்ளது.

4. நியூயார்க்: அமெரிக்காவில், பள்ளியில் படிக்கும் மாணவிகள் கருத்தரிப்பு அதிகரிப்பதற்கு "டிவி' நிகழ்ச்சிகள் தான் காரணம்; அதுபோல, குழந்தைகளின் வன் முறை போக்குக்கு, கம்ப்யூட்டர், வீடியோ "கேம்'கள் தான் காரணம்!' அமெரிக்காவில் உள்ள "ரான்ட்' என்ற பிரபல மனிதவள ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

5. இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரும், உளவியல் நிபுணருமான ஜீன் பெக்மேன் மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்கள்: சராசரியாக வாரத்திற்கு 28 மணி நேரம் என்ற புள்ளிவிபரத்தின் அடிப்படையில், வன்முறைகளைத் தொடர்ந்து காண்பதால் 8 வயதை நெருங்கி விடும்போது ஒரு சிறாரின் மனப்பக்குவம் ஒரு வாலிபரின் மனோநிலையை எட்டுகிறது. 12 வயதை நெருங்கும் வேளையில் ஒரு சிறுவன் / சிறுமி 8,000 கொலைகளை கண்களால் பார்த்து விடுகிறது. 18 வயதை நெருங்குகையில் இந்த எண்ணிக்கை 200,000 ஆக உயர்கிறது. ஒரு வருடத்தில் ஒரு சிறார் பார்க்கும் விளம்பரங்களில் 30 நொடி அளவுள்ள விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டும் 20,000.சிறார்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் வன்முறையும் குரோதங்களும் இயல்பான நிகழ்வை விட ஐந்து மடங்கு கொடூரமாக்கி காட்டப்படுகிறது.

இப்படிப் போனால் குழந்தைகளின்/சிறுவர்களின் எதிர்காலம் என்னாவது? உடல் வலுவிழந்து, மூளைத்திறன் குன்றி, சிந்திக்கும் ஆற்றல் இன்றி, செயலாற்றும் அனைத்து அபார ஆற்றல்களையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு படுவேகமாக அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இதிலே அலட்சியம் காட்டும் பெற்றோர் எதிர்காலத்தில் ஒளிவீச வேண்டிய தமது ஆற்றல் மிக்க சந்ததிகளை இப்போதே கண்களைக் கட்டி இருட்டிலே விட்டு அவர்களின் வாழ்வைப் பாழாக்குகிறார்கள் என்பது தான் பொருள். உங்கள் குழந்தைகள் ஏற்கனவே இதற்கு பழக்கமாகியிருந்தால் உடனே நிறுத்தாமல் கொஞ்சம் கட்டுப்பாடுடன் விளையாட அனுமதியுங்கள். வீடியோ கேமைப் பார்க்கும் யாருக்கும் அதை விளையாடிப் பார்க்கவே தோன்றும். வீ-யில் உடற்பயிற்சிக்கென சில விளையாட்டுக்கள் உள்ளன. யோகாவும் உள்ளன. அதைப் போன்று உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக் கூடிய விளையாட்டை அனுமதிக்கலாம். இதிலிருந்து விடுபட அவர்களுக்கு வேறு வகையான ஆர்வத்தை பெற்றோர்கள் தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

உங்களுக்காக ஒரு காணொளி.

7 comments:

ஸ்ரீராம். said...

பள்ளி விட்டு வந்ததும் கூடுதல் ட்யுஷன் , நாட்டிய வகுப்பு, கராத்தே என்று கற்றுக் கொள்ள வைக்கும் அவசர உலகில் வெளியே சென்று விளையாட ஏது நேரம்...இன்னும் எதிர்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வருமோ?

அரசூரான் said...

இரண்டு வாரங்களுக்குமுன் வந்த ஒரு கருத்தாய்வில் சராசரியாக ஒரு அமெரிக்கர் பதினேழரை மணி நேரம் மென்பொருள் சார்ந்த உலகத்தில் (கைதொலைபேசி, டெக்ஸ்டிங்க், வீடியோ கேம், தொலைக்காட்சி) சஞ்சரிக்கிறார்களாம், இதனால் முகத்தோடு முகம் பார்த்து பேசும் பழக்கம் மிக அருகிவருவதாக குறிப்பிட்டனர்.

உங்க லிஸ்டில் உள்ள எண் ஐந்த விஜயகாந்த் பட வசனத்திற்க்கு உதவும்போல இருக்கே...அங்க்

geethappriyan said...

மிக அருமையான கட்டுரை
எனக்கும் கவலை அதிகமாக இருக்கிறது
5 வயது சிறுவன் xboxல் டென்னிஸ் லாவகமாக ஆடுகிறான்,போலோ ஆடுகிறான்,நல்ல எக்ஸ்போஷர் இருக்கிறது இன்றைய சிறுவர்களுக்கு,ஆனால் முட்டியில் மண் படாது,வியர்வை இல்லை,சிறுவர்களுடனான விளையாடுதல் அறவே இல்லை.தனியனாய் எந்திரங்களுடன் விடப்படும் சிறுவரின் மனநிலை எதிர்காலத்தில் எப்படி இருக்குமோ?
இன்றைய நவீன உலகில் சிறுவர்கள் & பெரியவர்கள் எதிலும் லயிப்பதில்லை,எல்லாமே சாதாரணமாகவே உள்ளது,எங்கே போய் முடியுமோ?
நான் முடிந்தவரை செல்போன்களை ஆஃப் செய்து வைத்து பழகுகிறேன். தேடிப்போய் நண்பர்களை சந்திப்பதை ஆரம்பித்துள்ளேன்.
படிப்படியாய் காட்ஜெட்டுகளின் துணையை உபயோகத்தை குறைக்கணும்.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி ஸ்ரீராம். நீங்கள் சொல்வது உண்மை தான். எதிர்காலத்தை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. வருகைக்கு நன்றி.

@ வாங்க அரசூரான். ஆளயே கானோம். பலரும் முகத்தைப் பார்த்தாலே திருப்பிக் கொள்கிறார்கள். என்ன செய்வது. வாழப் பழகிக் கொள்ள வேண்டியது தான். புள்ளி விவரம்னு வரும் பொழுது உங்களுக்கு விஜயகாந்த் ஞாபகத்திற்கு வருகிறார் என நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.

@ அருமை நண்பர் கார்த்திக்கேயன், நீங்கள் சொன்ன ஒரு பாயிண்ட் (தேடிச் சென்று நண்பர்களை பார்க்கிறேன்) எனக்கு பிடித்திருக்கிறது. நானும் அதை பின்பற்றப் போகிறேன். என் மகள் இப்பொழுது கேட்பதெல்லாம் ஹைடெக் சாதணங்கள் தான். ஐபாட், ரிமோட் கண்ட்ரோல் கார்கள்,என்னுடைய லேப் டாப் கேம்ஸ் விளையாட, காரில் வீடியோ ப்ளேயர் இதெல்லாம் தான். எனக்கு விளையாட ஒரு கேரம் போர்ட் வாங்கித் தரவே என்னுடைய அப்பா அப்பொழுது அவ்வளவு யோசித்தார். நம்ம பட்ட கஷ்டம் நம்ம பிள்ளைகள் படக் கூடாது என நினைத்தால் அவர்கள் நம்மை விட ஒரு படி மேலே சென்று இதெல்லாம் கேட்க்கிறார்கள். என்னத்த சொல்ல. நன்றி கார்த்திக்கேயன்.

Thenammai Lakshmanan said...

காலேஜ் படிக்கும் என் பையன்களும் இது போலத்தான் எல்லா கேம்ஸும் விளையாடிக் கொண்டு இருக்காங்க லாப்டாப்புக்கு ஒரே அடிதடிதான் கோபிநாத்

M.S.R. கோபிநாத் said...

@ தேனம்மை, நீங்க காலேஜ் படிக்கிற பசங்கள சொல்றீங்க. என் மகள் 1ம் வகுப்பு படிக்கிறாள் அவள் நான் அலுவலகம் விட்டு வந்ததும் தனக்கு லேப்டாப் வேண்டும் என்று தினமும் என்னுடன் சண்டை போடுவாள். பாஸ்வேர்ட் ப்ரொடெக்டடாக இருப்பதால் அவளால் உள் செல்ல முடியாது. நன்றி தேனம்மை.

இளமுருகன் said...

//ஆடுவதற்குப் பெயர் தான் விளையாட்டு. நாமோ விளையாட்டைப் பார்க்கிற விஷயமாக மாற்றி விட்டோம். // என்ன ஒரு கசப்பான உண்மை!
இளமுருகன்
நைஜீரியா.