Showing posts with label கொண்டாட்டம். Show all posts
Showing posts with label கொண்டாட்டம். Show all posts

Tuesday, December 22, 2009

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

zwani.com myspace graphic comments


இன்றைய துருக்கியில் முன்பொருநாள் ஒரு செல்வந்தன் சொத்தையெல்லாம் இழந்து தெருவில் நின்றான்வறுமையில் வாடிய அவனுக்குத் தன் மகள்களை காப்பாற்றுவதே இறுதி முடிவாயிருந்தது. இதை அறிந்த ஒரு பாதிரியார் அவருக்கு பொருள் உதவி செய்தாராம்.

இந்தப் பின்னணியில் துவங்கியதுதான் கிறிஸ்துமஸ் தாத்தாவென நாம் அழைக்கும் 'சான்டா க்ளாஸின்' கதைஅந்தப் பாதிரியாரின் பெயர் செயின்ட் நிக்கோலாஸ், பின்னர் மருவி சான்டா க்ளாசாக உருப் பெற்றதுசெயின்ட் நிக்கொலாஸ் தனது சொத்து முழுவதையும் தானம் செய்வதில் செலவழித்தவர்.

கிறிஸ்துமஸ் தாத்தா இன்று உலகெங்கும் கிறிஸ்துமசின் அடையாளங்களில் ஒன்றாய் காணப்படுகிறார். வடதுருவம்தான் இவரின் ஊர்ஆண்டு முழுவதும் இவரது இருப்பிடத்தில் பரிசுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றனஇவருக்கு உதவியாக பல குள்ளர்கள்(எல்வ்ஸ்) வேலை செய்கிறார்கள்கிறீஸ்துமஸ் தினத்தன்று இவர் ஒன்பது மான்கள் இழுத்துச்செல்லும் பறக்கும் பனிரதத்தில் உலகெலாம் சென்று பரிசுகளை வழங்கிவருகிறார்.

இரவோடு இரவாக புகைபோக்கி வழியே நுழைந்து கிறிஸ்மஸ் மரத்தின் அருகே தொங்கவிடப்பட்டிருக்கும் காலுறைகளுக்குள் பரிசுகளை விட்டுப் போவது இவரது வழக்கம்.

பரிசுக்கள் எல்லோருக்கமல்லஆண்டு முழுதும் நல்லவர்களாயிருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே என்பது வருந்தத்தக்க கிளை செய்திகிறிஸ்மஸ்தாத்தா கற்பனையில் புனையப்பட்ட ஒரு பாத்திரம் என உணர்வதற்கு குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் பிடிக்கிறது.

நம் ஊர்களில் புகைபோக்கிகள் இல்லாததாலோ என்னவோ இங்கே கிறிஸ்மஸ்தாத்தா கொடுப்பவராக இல்லாமல் வாங்குபவராகவே வருகிறார். வீடு வீடாகச் சென்று கிடைக்கும் பண்டங்களை பங்கிடுவதும் காசு பிரிப்பதும் இங்கே கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் கலந்துவிட்டிருக்கும் வேடிக்கைகளில் ஒன்று. லாரி ஒன்றை வாடகைக்கமர்த்திக்கொண்டு ஊர் ஊராக பாடல் பாடிக்கொண்டே செல்பவர்களும் உண்டு.

கிறிஸ்மஸ் காலத்திற்கென்றான பாடல்கள் 'காரல்ஸ்' (Carols) என வழங்கப்படுகின்றன. வருடாவருடம் வீடு வீடாகப் போய் இனிய கிறீஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடி மகிழ்ந்து, மகிழ்விக்கும் பாடற்குளுக்களுக்கும் நன்கொடைகளும் இனிப்புகளும் வழங்கப்படும்.

கிறிஸ்துமஸ் இசை எனக்குப் பிரியம். ஆங்கிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற 'Silent night', 'Jingle Bells', 'Hark the herald', 'Joy to the world', 'Away in a Manger', 'Mary's boy child' போன்ற பாடல்கள் எப்போதும் அமெரிக்க வானொலிகளில் இதமாய் ஒலிக்கின்றன .

பனிக்காலத்தில் வரும் கிறிஸ்துமசை எதிர்பார்க்கும் 'I'm dreaming of a white Christmas', 'எப்படியாவது பண்டிகைக்கு வீட்டுக்குவந்துவிடுவேன்' என ஏக்கத்துடன் அறிவிக்கும் 'I will be home for Christmas', கிறிஸ்மஸ்தாத்தாவின் வருகையைச் சொல்லி மகிழும் 'Santa Claus is in town' என எண்ணங்களில் விளையாடும் பாடல்களை இந்தக் காலங்களில் கேட்கமுடிகிறது.

கிறிஸ்துமசை அடுத்து புது வருட பிறப்பு. நல்ல புது பழக்கங்களை பழகவும் சில கெட்டவைகளை களையவும் இது நல்ல தருணம். புதுவருட தீர்மானங்களில் ஒன்றாய் சக மனிதரை மதித்து நடப்பது எனும் உயரிய கோட்பாட்டை எடுக்கலாம். எளிதில் சொல்லிவிட முடிகிறது என்றாலும் எல்லோரும் முயலவேண்டிய ஒன்று. மனித உயிருக்கு, மனிதனுக்கு மதிப்பு குறைந்து வருவதை கண்கூடாஅகப் பார்க்கிறோம். வரும் வருடத்தில் இதைக் களைய நம்மால் ஆனதைச் செய்வோம்.

மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் மனம் நிறைக்கும் இந்த பண்டிகைக் காலங்களில் அவற்றின் உள் அர்த்தங்களை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பண்டிகைகளுமே வியாபாரமயமாக்கப்பட்டுவிட்டன. பண்டிகையென்ன, வாழ்க்கையே வியாபாரமயமாகிவிட்டது.

கிறிஸ்துமஸ் பகிர்தலின் பண்டிகை. நமக்கு கொடுப்பவருக்கே திருப்பிக் கொடுப்பதில் என்ன இருக்கு? இல்லாதவருக்கு அருள்வதே சிறப்பு எனச் சொன்ன இயேசுவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடவேண்டும் என்பதை சொல்லித் தெரிவதில்லை.

கொண்டாட்டங்கள் எல்லாம் கொடுப்பதிலே நிறைவுபெறட்டும்.

அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நன்றி : தமிழோவியம்

Wednesday, November 11, 2009

நன்றி தெரிவித்தல் நாள் - தேங்ஸ் கிவ்விங் டே


அமெரிக்கர்களுக்கு அடுத்து திருவிழாக் காலம் தொடங்கி விட்டது. இந்த திருவிழா அமெரிக்காவிலும், கனடாவிலும் முக்கியமாக கொண்டாடப் படுகிறது. எல்லோருக்கும் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். ஆரம்பத்தில் இது கிருத்துவ மதத்தின்பேரில் கொண்டாடினாலும் இப்பொழுது மதங்களுக்கு அப்பாற்பட்டு இந்த திருவிழா நடக்கிறது. இந்த நன்றி தெரிவித்தல் நாள் கிட்டத்தட்ட தமிழகத்தில் கொண்டாடப்படும் "பொங்கல்" மற்றும் "உழவர்" திருநாளைப் போலவே அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக் கிழமையிலும், கனடாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட் கிழமையிலும் நடைபெறும். இந்த வருடம்(2009)நவம்பர் 26 ஆம் தேதி இங்கு நடைபெறுகிறது.

தோற்றம்

சுமார் 400 வருடங்களுக்கு முன்னால் இந்த திருவிழா ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 1620 இல் ஒரு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இங்கிலாந்திலிருந்து அட்லான்டிக் கடல் மார்க்கமாக ஒரு புனிதப்பயணம் மேற்கொண்டது. அவர்கள் அமெரிக்காவில் மசாசூட் என்ற மாகாணத்தில் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்து இறங்கிய நேரம் கடுமையான குளிர் மற்றும் பனியினால் அவதிப்பட்டார்கள். அந்த நேரம் அவர்களால் எதையும் பயிரிட்டு உண்ண முடியாமல் பசியால் வாடினார்கள். கடுமையான நோய்களும் அவர்களைத் தாக்கியது. அதில் சிலர் இறந்தும் போனார்கள். அந்த நேரம் அங்குள்ள சிவப்பிந்தியர்கள்(Red Indians) அவர்களுக்கு உணவு கொடுத்து, அந்த பரிச்சயம் இல்லாத மண்ணில் எப்படி பயிர்களை விளைவிப்பது என்பதையும், மீன் பிடிக்கவும் கற்றுக் கொடுத்தார்கள். 1621 ம் வருடம் அந்த மண்ணில் சோளக்கருது, பீன்ஸ், பார்லி மற்றும் பூசணிக்காய் போன்றவற்றை விளைவித்து அறுவடை செய்தார்கள்.


தக்க சமயத்தில் தங்களைக் காப்பாற்றியதற்காகவும், உணவுகொடுத்து ஆதரித்தமைக்காகவும் நன்றி செலுத்தும் விதமாக அமெரிக்கர்களுக்கு ஒரு விருந்து கொடுத்தார்கள். அந்த விருந்தில் வான்கோழி முக்கிய உணவாகப் பரிமாறப்பட்டது. விருந்து முடிந்ததும் சில விளையாட்டுக்களையும் அமெரிக்கர்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இதைத் தான் இன்றுவரை நன்றி தெரிவித்தல் நாளாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.


அதிலிருந்து அமெரிக்கா வந்த காலனிக்காரர்கள் ஒவ்வருவருடமும் அறுவடை முடிந்ததும் நன்றி தெரிவிக்கும் நாளை விருந்துடன் கொண்டாட ஆரம்பித்தார்கள். அமெரிக்கா தனிநாடாக அறிவிக்கப் பட்டதும், காங்கிரஸ் கூட்டத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து அதை நன்றி தெரிவித்தல் நாளாகவும், விடுமுறை நாளாகவும் அறிவித்தார்கள். ஜார்ஜ் வாஷிங்டன் நவம்பர் 26ம் தேதியை தேங்ஸ்கிவ்விங் டே என்று திட்டவட்டமாக அறிவித்தார். 1863ம் ஆண்டு ஆப்ரகாம் லிங்கன் நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை தேங்ஸ்கிவ்விங் டே என்று மாற்றினார். அதிலிருந்து நவம்பர் நாலாவது வியாழக் கிழமையை இன்றுவரை அமெரிக்கர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

வழக்கம்

நன்றி தெரிவித்தல் நாளை அதே கலாச்சாரத்துடன் பழமை மாறாமல் ஒவ்வருவருடமும் வழக்கமாக கொண்டாடி வருகிறார்கள்.பெற்றோரை விட்டு வெகு தூரத்தில் இருப்பவர்கள், உறவினரைப் பிரிந்தவர்கள் எல்லோரும் அந்த குடும்பத்தில் மூத்தவர் வீட்டில் அன்று கூடுவார்கள்.அன்று ஒருவருக்கொருவர் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வர். ஏழைகள் மற்றும் வீடு இல்லாதவர்களை தொண்டு நிறுவனங்கள் உணவு, உடை கொடுத்து பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வழக்கம்.

விருந்து

வியாழன் அன்று இரவு நன்றி தெரிவித்தல் நாள் விருந்து நடைபெறும். அன்று முக்கிய உணவாக வான்கோழி(Turkey), மக்காச்சோளம்(Corn), பூசணிக்காய் மற்றும் கிரேன்பெர்ரி(Cranberry) வகைப் பழங்கள் இருக்கும். வான்கோழியில் சில மசாலாக்களை வைத்து அடுப்பில் நீண்ட நேரம் அதை வறுத்து சுடச்சுட பரிமாறப்படும். கிரேன்பெர்ரியில் சில நோய்களைத் தீர்க்கும் மருந்து இருப்பதால் அதை பழமாகவோ, ஜூஸாகவோ பரிமாறப்படும்.
மற்ற நாடுகளில்

கிரேக்க, ரோம, எகிப்திய, எபிரேயக் கலாச்சாரங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை விழா கொண்டாடியிருக்கின்றன.
  • கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.
  • ஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோரி-னோ-இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.
  • சைனாவில் மக்கள் ஆகஸ்ட் நிலா விழா கொண்டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.
  • வியட்நாமில் – தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்தமாய் ஒன்றித்திருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மையப்படுத்துகிறது.
  • இஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதினைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படுகிறது.
  • ஆப்பிரிக்காவில் யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இறைவனுக்கு, இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. இரட்டையர்கள், மூவர் முதலானோர் இறைவனின் சிறப்புப் பரிசுகளாகக் கருதப்பட்டு இந்த விழாவில் பெருமைப்படுத்தப் படுவதுண்டு.
  • ஆஸ்திரேலியாவிலும் ஏப்ரல் மாத கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் – ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படுவது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது.
  • ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோ பர்விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோ பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
  • இங்கிலாந்தில் அறுவடைவீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழாவில் பழங்களையும், காய்கறிகளையும் இறைவனுக்குப் படைக்கும் விழாவாகவும், நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. ஆலயங்களை எல்லாம் அலங்கரித்து மக்கள் அறுவடை செழிக்கவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறார்கள்.
  • மலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்சலுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.

எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடுமெனில் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், இறைவனோடும் கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.


கருப்பு வெள்ளி - பிளாக் ஃபிரைடே நன்றி தெரிவித்தல் நாளுக்கு அடுத்த நாள் வருவது பிளாக் ஃபிரைடே. இந்த நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்கள் உண்டு. இன்றிலிருந்து ஆரம்பித்து கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள் வரை பரிசு வாங்கும் படலம் தொடரும். இந்தப் பரிசு வாங்கும் காலத்தில்தான் அமெரிக்க சில்லறை வியாபார சங்கிலித் தொடர் கடைகளும் வணிக நிறுவனங்களும் அந்த வருடத்திய லாபத்தில் நாற்பது சதவிகிதத்தைச் சம்பாதிக்கின்றனவாம். அந்த லாபத்தில் பதினைந்து சதவிகிதத்தை இந்த வெள்ளிக் கிழமையும் அதை அடுத்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையும் சம்பாதிக்கின்றனவாம். கருப்பு வெள்ளிக்கிழமை என்றால் சோகமான வெள்ளிக்கிழமை என்று அர்த்தமல்ல. நஷ்டம் ஏற்பட்டால் வியாபாரிகள் சிவப்பு எழுத்தில் அதைக் குறிப்பிடுவார்களாம். அதனால் லாபத்தைக் குறிப்பிட கருப்பு எழுத்தில் எழுதுவார்களாம். அதீத லாபம் கொடுக்கும் இந்த நாளை கருப்பு வெள்ளி என்கிறார்கள்.

வியாழக்கிழமை இரவிலிருந்தே வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு முன்னால் வரிசையில் நிற்பார்கள். இந்த தினம் நவம்பர் மாதம் கடைசியில் வருமாதலால் ஓரளவிற்குக் குளிர் இருக்கும். நன்றி தெரிவிக்கும் பண்டிகையன்று உறவினர்களோடும் நண்பர்களோடும் பெரிய விருந்து உண்டு பிறகு அந்தக் குளிரில் வரிசையில் நின்று பரிசுப் பொருட்களை வாங்குவார்கள்.

Saturday, October 31, 2009

அமெரிக்கத் தீபாவளி - ஹாலோவீன்


அமெரிக்கர்களின் அன்றாட வாழ்க்கையில் சற்று மாறுதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வெளிச்ச விழா! இந்த அமெரிக்கத் தீபாவளி. இந்த அமெரிக்கத் தீபாவளிக்குப் பெயர் "ஹாலோவீன்". இறந்தவர்கள் சொர்க்கத்துக்கும் போகாமல் நரகத்துக்கும் போகாமல் ஆவியாக அலைந்து கொண்டிருப்பவர்களை மகிழ்விக்கும் நன்னாள் தான் "ஹாலோவீன்" நாள் என்பது. இப்படிப்பட்ட கெட்ட ஆவிகளை மகிழ்ச்சியடையச் செய்வதன் மூலம் தங்களுக்கு எந்த விதமான பாதிப்புகளும் நேராது என நம்புகிறார்கள் அமெரிக்கர்கள்.

தீபாவளியைப் போலவே ஹாலோவீனுக்கும் வாழ்த்து அட்டைகளிலிருந்து பூங்கொத்துகள், பரிசுக்கூடைகள், ஹாலோவீன் குக்கீஸ், டாய்ஸ், கேண்டி எனப்படும் மிட்டாய் தினுசுகள், ஸ்டிக்கர்கள், பேனா, பென்சில், ஆடியோ விடியோ காசட்டுகள், வித விதமான முகமூடிகள்(மாஸ்க்குகள்) என கடைகளில் அக்டோபர் மாத துவக்கத்திலேயே படுசுறுசுறுப்பாக வியாபாரம் களைகட்டத் துவங்கிவிடுகிறது. இது தவிர 24மணிநேரமும் இயங்கும் உலகளாவிய வலையகக் கடைகளில் (ஆன் லைன் ஷாப்பிங்) வேறு பிசியாக நடக்கிறது.

வினோத அலங்கரிப்புகள்



வீட்டுவீட்டுக்கு சோளக்காட்டு பொம்மை போல எதாவது ஒரு பொம்மை உருவம் இருக்கும். வீடு தவறமல், பூசணிக்காய் உள்ளங்கை அளவிலிருந்து, ஒரு ஆள் கட்டிப் பிடிக்க முடியாத ராட்சச பூசணி அளவு வரை இடம் பெற்றிருக்கும். பூசணியை முகம் போல வெட்டி இரவில் வண்ண விளக்குகள் ஒளிர வைத்திருப்பார்கள். பொங்கலுக்கு வீட்டு நுழைவாயிலில் இருபுறமும் தோகையுடன் கூடிய கரும்பு செழித்தெழுந்து நிற்குமே, அது போல காய்ந்த மக்காச் சோளத் தட்டைகளை குவியலாய் நிறுத்தி வைத்திருப்பார்கள். நிலைப்படியில் மரிக்கொழுந்து, மாவிலைத் தோரணம் கட்டியிருப்பதுபோல கலர்கலரான காய்ந்த மக்காச் சோளக் கதிர்கள், காய்ந்த பல்வேறு இலை கொத்துக்களை செருகி வைத்திருப்பார்கள். வீட்டு முகப்பில் சோபாவில் ஒரு எலும்புக்கூடு ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு புகை பிடித்துக்கொண்டிருக்கும். வீட்டைச் சுற்றியுள்ள மரங்களில் மண்டை ஓடுகள், எலும்புகள் என்று தொங்கிக்கொண்டிருக்கும். இதெல்லாம் எதற்கு?

எல்லாம் நம் இனத்தவர்கள் தான் என்று பேய் பிசாசுகள் விசிட் அடிக்கும் போது தெரிந்து கொள்ளத்தான். இரவு நேரங்களில் இதை அறியாத பயந்த சுபாவம் உள்ளவர்கள் போனால் இருதயம் திடீர் பிரேக் போட்டுவிடும். இதுபோன்று வினோதமான அலங்கரிப்புகளில் அமெரிக்க இல்லங்கள் காட்சி தரும். பூசணிக்காய்ப் பண்ணையில் பூசணி வாங்க மக்கள் கியூவில் நின்றதொருகாலம்!

தெருக்கூத்து



முகங்களில் கருப்புச் சாயம், கண்களைச் சுற்றிக் கலர்கலராக புள்ளி வைத்து, உதட்டுச்சாயம் பூசி, தலைக்கு விக் வைத்துக் கொண்டு ஆண்களும் பெண்களும் பேய்களாக, பிசாசுகளாக, ஆவிகளாக, சூனியக்கார-காரிகளாகமந்திரக்கோல் போன்று வைத்துக்கொண்டு போக்குவரத்து மிகுந்த இடங்களில், பெரிய பெரிய மால்களில்( பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள்தான்) பொது மைதானங்களில், திடீர்... திடீர் என்று தோன்றி திகில் ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் ஒரு ஜாலி..ஜாலியான நிகழ்வுகளாகத்தான் அங்கங்கே நிகழும். மின்னல் வேகத்தில் வந்து அந்தப் பகுதியில் ஒரு கலகலப்பை ஏற்படுத்திவிட்டு வந்த சுவடு தெரியாமல் போயும் விடுவார்கள்.

எங்கும் கோலாகலம்



ஆவிகளுக்குப் பிடித்த இருட்டுப் பொழுதுகளில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆனந்தப் பெருவெள்ளத்தில் மக்கள்ஆழ்ந்துபோகிறார்கள். வாழ்க்கை வாழ்ந்துபடுவதற்கே என்கிற சித்தாந்தத்துக்கு உதாரணமானவர்கள் அமெரிக்கர்கள். ஹாலோவீன் தினத்தை பிரதிபலிக்கிற விதவிதமான வண்ண உடைகளில் இரவுவிடுதிகளை நிறைத்துக் கொண்டு ஆட்டமும் பாட்டமும், கேளிக்கைகளில் தங்களைத் தற்காலிகமாக மறந்து உல்லாசிக்கிறார்கள். ராஜராஜாக்கள், கோமாளிகள் என்ற முகமூடிகளில் அவர்களின் முகவரிகள் மறைந்திருக்கலாம். அகமும் முகமும் ஒருசேரச் சிந்துகிற மகிழ்ச்சிப்பூக்களை எல்லோரிடமும் சிதறவிட மறப்பதில்லை. உற்சாக பானம் அருந்திவிட்டு உளறும் நிலைக்கு யாரும் போய்விடுவதில்லை. உற்சாகமாக இருப்பதற்காக மட்டுமே இதை அருந்துகிறார்கள். நியுமெக்சிக்கோ மற்றும் சில பகுதிகளில் வாழும் அமெரிக்க இண்டியன்கள்(சிவப்பு இந்திய காட்டுவாசிகள்) மட்டுமே போதை தலைக்கேற உருள்வது, பிறழ்வது எல்லாம். இந்த நாளில் அநேகர் "டேட்டிங்" வைத்துக்கொண்டு கவலையின்றி ஆவிகளோடு ஆவிகளாக ஐக்கியமாவது உட்பட கோலாகலமாக கழிக்கின்றனர்.

பள்ளிகளில்



மழலையர் பள்ளியிலிருந்து கல்லூரிவரை "ஹாலோவீன்" கொண்டாட்டத்துக்கு குறைவிருக்காது. அதிலும் சின்னஞ் சிறு பிஞ்சுகள் தங்களுக்குப் பிடித்த மிக்கிமவுஸ், எல்மோ, பிக்பேர்டு, லேடி பக், பேட்(வவ்வால்), முயல், கிளி·ப்பர்டு, எமன் வாகனம்போல கொம்புக்காளைமாடு இப்படி எத்தனையோ முகமூடிகளில் வித்தியாசமான காஸ்ட்யூம்களில் ஜொலிப்பதைக் காணக் கண் கோடி வேண்டும். அன்று அந்தந்த வகுப்பு ஆசிரிய அசிரியைகள்கூட கோமாளி போல சூனியக்காரி போல வந்து குழந்தைகளை " TRICK OR TREAT BAGS " கொடுத்து மகிழ்விப்பது குறிப்பிடத் தக்கது. பள்ளி அரங்கில் ஒருநாள் எல்லா வகுப்பு மாணவ மாணவிகளும் இணைந்து பங்கேற்கும் "ஹாலோவீன்" நிகழ்வில் குழந்தைகளின் பெற்றோர்களும் வந்து கலந்து உற்சாகப்படுத்துவார்கள். அக்.31ம் தேதி சிறு குழந்தைகள் கையில் ஒரு கூடையோ பையோ, அதுவும் பூசணிக்காய் போன்ற பிளாஸ்டிக் கூடையை எடுத்துக்கொண்டு வீடுவீடாகக் கிளம்பிவிடுவார்கள். வீட்டிலிருப்போர் குழந்தைகளுக்கு வாழ்த்துச் சொல்லி விதவிதமான கேண்டிகளை (இனிப்பு மிட்டாய்களை ) வழங்குவார்கள். குழந்தைகள் மீண்டும் வீடுதிரும்பும்போது உற்சாகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பார்கள்.

அவசியம் ஹாலோவீன் .....ஏன்?


இறந்தவர்கள் பூமிக்கு நடந்து வரும் தினம் இது என்பது சிலரது நம்பிக்கை ! அதனால்தான் சிறுவர்சிறுமியர் வாலிபர், பெரியவர் என்ற பேதமின்றி பேய்களைப் போல ஆவிகளைப்போல உடையணிந்து வலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். Trick- or- Treat செய்து ஆவிகளைப் பரிசுகளால் மகிழ்விக்கச் செய்வதை தொடர்வோம். யாருடைய நம்பிக்கை எப்படியிருந்தாலும் ஹாலோவீன் இரவு என்பது இறந்துபோன நம்மவர்களுக்காக நாம் செய்யும் மரியாதை! அவர்களைக் கெளரவப்படுத்தும் அந்த நிகழ்வை நாம் கொண்டாடாமல் வேறுயார் கொண்டாடுவது? அது மட்டுமா, அநேகமாக முதல் தடவையாக தங்கள் குழந்தைகள் முகமூடி அணிந்து "Trick-or-Treat" போகும்போது பெற்றோர்களுக்கு புதிய பல அறிமுகங்கள் கிடைக்கும்.


கடைகளில் ஹாலோவீன் அடையாள வில்லைகள், பூசணிக்காய் முகங்கள், விதவிதமான ஹாலோவீன் உடைகள், வகைவகையான ஹாலோவீன் கேண்டிகள், கல்லறைத் தூண்கள், ரத்தம் சொட்டச் சொட்ட உடம்பின் பாகங்கள், வினோத ஒலியெழுப்பும் ஒலி,ஒளி நாடாக்கள், மக்களை திகில் கொள்ளச் செய்யும் ஆயிரக்கணக்கான அலங்கரிப்புப் பொருட்கள் என்று பல பில்லியன் டாலர் புரளுகின்ற ஹாலோவீன் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் பணப் புழக்கம் இழந்த பொருளாதாரத்தை சற்றேனும் மீட்டெடுக்க உதவும் என்பதில் ஐயமில்லை!


ஹாலோவீன் பலகாரங்கள்



ஹாலோவீன் விசேச பலகாரங்கள் இல்லாமல் ஒரு ஹாலோவீனா? பலகாரங்கள் என்னென்ன? பட்டியல் போட்டால் அதுவே ஒரு கட்டுரை போலாகிவிடும்.Black Cat Cookies, Pumpkin Roll with Cream Cheese Filling, Pumpkin Soup, Pumpkin Crunch Dessert, Pumpkin Cupcakes, Cheese Eyeballs, Toxic Tomatoes, Ghoulish Gruel, Gnarled Witch's Fingers, Perfect Popcorn Balls, Brains on the Half Skull, Mystery Punch with Frozen Hand, Candied Apples, Frozen Jack O'Lanterns, Spicy Halloween Ginger Cake, Spider's Nest Dip, Toasted Pumpkin Seeds, Blood Punch, Ice Cream Vampire Bats, Spooky Cookies


ஹாலோவீன் Flash Back


நான்காம் நூற்றாண்டில் ரோமச் சக்கரவர்த்தியாக இருந்த கான்ஸ்டண்டைன் காலத்தில் இறந்தவர்களின் நினைவாக அக்டோபர் மாதம் 31ம் தேதியை மரித்தோர் தினம் என்று கொண்டாடத் தலைப்பட்டனர். ஏழாம் நூற்றாண்டில் மே மாதத்தில் அனைத்துப் புனிதர்கள் நாள் (ALL SAINT'S DAY ) என்று கொண்டாடினர். 9ம் நூற்றாண்டில் இந்த நாள் நவம்பர் 1ம்தேதியாக மாறியது. அப்போது வாழ்ந்த பாகான் என்றழைக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அற்ப ஆயுளில் இறந்தவர்கள் ஆவியாக, பேயாக அக்டோபர் 31ம் தேதி வருவதாக நம்பி அந்த நாளை அனைத்து ஆவிகள் தினமாக( ALL HALLOW'S EVEN) என வழிபட்டனர். 10ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ ஆலயங்களில் நவம்பர் 2ம் தேதியை "அனைத்து ஆத்மாக்கள் தினம்" (ALL SOULS' DAY ) என இறந்து போன அனைத்து ஆத்மாக்களுக்காக ஏற்படுத்தினர். இந்த மூன்று தினங்களும் அடுத்தடுத்து வந்ததால் சில நாடுகளில் இதை ஒருங்கிணைத்து ஒன்றாக்கினர். ஹாலோவீன் என்பதின் அடையாளச் சின்னமாக சூனியக்காரி உருவத்தை படு விகாரமாக ஏற்படுத்திக் கொண்டனர்.


இங்கிலாந்தில் இந்த நாளில் துடைப்பக் குச்சியில் ஒருவிதமான களிம்பை தடவி வீட்டுக்கு வெளியே வைத்து விடுவார்களாம். பேயாக உலவும் ஆவிகள் இந்த துடைப்பக் குச்சியை எடுக்கும்போது அதிலுள்ள களிம்பு ஒட்டிக் கொள்வதால் கால்கள் தரையில் பாவாமல் வெகுவேகமாக நிலத்துக்கும் கடலுக்கும் மேல் பறந்து போய் விடுவதாக(!) நம்பி இப்படிச் செய்து வந்திருக்கின்றனர். இதனால் வீட்டுக்கு வந்தது விளக்குமாற்றோடு போச்சு என்று சொல்லிக் கொள்வார்களாம்.


ஸ்காட்டிஷ் குழந்தைகள் இன்றும் இதனை நினைவு கொள்ளும் வகையில் டர்னிப்பை வெட்டி மெழுகுவர்த்திகளை ஏற்றிவைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தின் ஒரு பகுதியில் இன்றும் பெரிய பெரிய பீட்ரூட்டைப் பயன்படுத்துகின்றனர். ஸ்காட்டிஷ், ஐரிஷ் இனத்தவர்கள் அமெரிக்காவில் வந்து குடியேறியபோது டர்னிப், பீட் ரூட்,உருளைக்கிழங்குக்குப் பதிலாக பூசனிக்காயை அலங்காரப் பொருளாக வெவ்வேறு வடிவங்களில் வெட்டி வீடுதோறும் வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.ஐரோப்பியர்கள் இந்த அக்டோபர் மாதத்தை மிகவும் கடினமானதாகக் கருதுவார்கள். இங்கிலாந்தின் ஒரு பகுதியில், ஹாலோவீன் தினத்தில், வீடுவீடாகப் போய் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள். கேக்குகள், பணம் என்று அளிப்பதை இன்றும் காணலாம். ஸ்பானியர்கள், கல்லறைக்குச் சென்று கேக்குகளையும் பருப்பு வகைகளையும் வைத்து ஆவிகளை மகிழச் செய்வார்கள். இப்படியாகத்தானே ஆதியிலிருந்து இன்றுவரை ஹாலோவீன்..... நடந்தது... நடந்து கொண்டிருக்கிறது.

Friday, October 9, 2009

தீபத் திருநாள் - தீபாவளி

எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்து எதைப் பற்றி எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது ஏன் தீபாவளியைப் பற்றி எழுதக் கூடாது என்று தோன்றியது. தீபாவளியைப் பற்றி நம்ம என்ன புதுசாகச் சொல்லப் போகிறோம் என்றெல்லாம் தகவல் சேகரித்தபோது நமக்கு தெரிந்ததை புதுமையாகச் சொல்வோம் என்று தோன்றியது. உண்மையில் தீபாவளியை நாம் முறையாகத் தெரிந்து கொண்டாடுகிறோமா? தீபாவளியை பற்றி கொஞ்சம் தெரிந்தும், நிறைய விஷயங்கள் தெரியாமலும் நாம் கொண்டாடுகிறோம். விஷயத்திற்கு வருவோம்.

தீபாவளி ஒரு முன்னோட்டம்.

தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை.வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது,

1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது.

2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

3. பசு நெய்க்கு மாற்றாக, ஆமணக்கு விதையை விளக்கெறிக்க பெளத்தர்கள் கண்டுகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கிய நாளே தீபாவளி என்றும் சொல்லுவார்கள்.

4. சமண மதத்தில் கடைசியாக வந்த, 23 ஆம் திருத்தங்கர் "மகாவீரர்" நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் "புனித நீராடல்" என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம்,அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணையில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கெளரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதேயாகும்.

எல்லா நதிகள்,ஏரிகள்,குளங்கள்,கிணறுகளிலும்,நீர்நிலைகளிலும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம் ஆச்சா? " என்று கேட்கிறோம்.

தீபாவளி - 2009 - சிறப்பு

தீபாவளி என்றாலே "ஐப்பசி" மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த வருடம், "புரட்டாசி" மாதத்தில் தீபாவளி வருகிறது. இதிலும் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் வரும் தீபாவளி மிகவும் அபூர்வமானது.

இந்த வருடம், இப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தின் கடைசி (5வது) சனிக்கிழமையில், அமாவாசை நாளில், தீபாவளிப் பண்டிகை வருகிறது. அபூர்வமான தீபாவளித் திருநாள், 300 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடத்தில் தான் அமைந்துள்ளது என்பது பஞ்சாங்கக் குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.

கேட்டதில் தெரிந்துகொண்டது
1. அந்த காலத்தில் ஒரு வாரத்திற்கு முன்பே பலகாரங்களுக்காக எல்லா பொருட்களையும் வாங்கி வைத்து நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் இனிப்புகளை தயார் செய்ய ஆரம்பித்து விடுவார்களாம்.

2. தீபாவளிக்கு முந்திய இரவு விடிய விடிய எண்ணைய்ப் பதார்த்தங்களை தயார்செய்துவிட்டு, அதே அடுப்பில்(விறகு) நல்லெண்ணையில் சீரகமும், வெந்தயமும் போட்டு காய்ச்சி(குளிக்க), அதே அடுப்பில் எல்லோரும் குளிக்க சுடுதண்ணீரும் வைப்பார்களாம்.


3. தீபாவளி அன்று இரவில் ஏற்றப்படும் விளக்கு,ஒவ்வருநாளும் இரவில் தொடர்ந்து வீட்டு வாசலில் சிறிய விளக்கேற்றி கார்த்திகை மாதம் திருவண்ணமலையில் தீபம் ஏற்றப்படும் நாள்வரை தொடர்ந்து ஏற்றிவருவார்கள். இது இப்போது வழக்கத்தில் இல்லை .

4. ஆடிக்கழிவிலே வீட்டில் எல்லோருக்கும் புத்தாடைகள் எடுக்கப்படும்.

5. தீபாவளியன்று இரவு உணவில் இஞ்சிப் பச்சடி கண்டிப்பாக இருக்கும். இது பகலில் சாப்பிட்ட எண்ணைப் பலகாரங்கள் செரிப்பதற்க்குக் கொடுக்கப்படுகிறது.

இனிப்பு - பலகாரம்

தீபாவளி என்றாலே இனிப்புத் தான் ஞாபகம் வரும். நம் வீட்டில் செய்யப்பட்ட இனிப்பு, காரங்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்தளித்துக் கொடுக்கும் பண்பாடு நம்முடையது. இன்றைக்கு பெரும்பாலும் இனிப்புகளையும், காரங்களையும் கடையில் வாங்கிக்கொள்கிறார்கள். எல்லாமே ReadyMade உலகமாகிவிட்டது.

காலை உணவில் இட்லியும், வடையும் பிரதானமாக இருக்கும். இனிப்புக்களும் பரிமாரப்படும்.வடையில் அவரவர் விருப்பத்திற்க்கு தகுந்தவாறு உளுந்தவடையோ அல்லது பருப்புவடையோ செய்வார்கள்.
அடுத்து கிராமபுறங்களில் விரும்பி உண்ணும் இனிப்பு அதிரசம். இந்த அதிரசம் சர்க்கரையில்(வெல்லம்) செய்யப்படும். இதன் ருசியே தனி தான்.சீனியில் செய்யப்படும் அதிரசம் அவ்வளவு ருசிப்பதில்லை. அந்த காலத்தில் கருப்பட்டியில் (பனை வெல்லம்) அதிரசம் செய்வார்களாம். அதே வரிசையில் அடுத்து நெய்-அப்பம்,லட்டு,ரவா லட்டு,தேங்காய் மிட்டாய்..etc

காரவகையில் முதலிடம் பிடிப்பது "முறுக்கு". அப்புறம் சீடை, தட்டை, தேன்குழல், மிக்சர், காரபூந்தி, ஓமப்பொடி..etc.
பட்டாசு

பட்டாசு இல்லாமல் தீபாவளியா?.இந்த நாளிற்க்காகவே குழந்தைகளும்,சிறுவர்களும் மாதக்கணக்கில் காத்திருப்பர். மத்தாப்புக்களில் தான் எத்தனை வகைகள். பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்களும் சிறியவர்களாக மாறும் மாயஜாலம் இந்த நாளில் நடக்கும்.

அமெரிக்காவில் தீபாவளி

அமெரிக்காவில் நம் இந்தியப் பண்டிகைகள் கொண்டாடுவது சனி, ஞாயிறுகளில் தான். உதாரணமாய் தீபாவளிப் பண்டிகை திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள எந்தக் கிழமைகளில் வந்தாலும், அதுக்கு முன்னர் உள்ள சனி, ஞாயிறோ அல்லது வியாழன், வெள்ளிகளில் வந்தால் அடுத்து வரும் சனி, ஞாயிறுகளையோ பண்டிகை கொண்டாடிக் கொள்கிறார்கள். தீபாவளிக்கு வீடுகளில் பட்டாசோ அல்லது மத்தாப்போ கொளுத்த அரசாங்கம் அனுமதிப்பது இல்லை. அமெரிக்கர்களின் சுதந்திர நாள் மட்டும் விதிவிலக்கு. மற்ற நாட்களில் இந்த மாதிரியான வாணவேடிக்கைக் கொண்டாட்டங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் சில இந்தியக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெரிய குழியாகச் செய்து, சுற்றிலும் தடுப்புப் போட்டு வைக்கின்றனர். தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, கோவிலிலேயே பட்டாசு, மத்தாப்பு விற்கின்றனர். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே விற்பனை செய்வார்கள். நாம் நமக்குப் பிடித்தமான பட்டாசு, மத்தாப்பு வாங்கிக் குறிப்பிட்ட இடத்தில், குறித்த நேரத்தில் மட்டுமே வெடிக்கலாம். அநேகமாய் இரவு 7 மணி முதல் 8 அல்லது 8-30 மணிக்குள்ளாக வெடிக்கும் விளையாட்டு முடிந்து விடும்.

இப்பொழுதெல்லாம், நாம் எல்லோரும் காலையிலிருந்து இரவு வரை நமது பண்டிகைகளெல்லாம், சின்னத் திரை முன்னால் கழித்துவிடுகிறோம். மொத்தத்தில், பண்டிகைகளுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் என்ன தொடர்பு என்று எனக்கு புரியவில்லை. இப்படியே சென்றால் வார விடுமுறைகளையும், விளம்பரங்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் தாரை வார்த்து, விளம்பரங்களுக்கிடையே சிறிது நேரம் நிகழ்ச்சி ஒளிபரப்பும் நிலை வந்தாலும் வரலாம்.