Wednesday, February 3, 2010

கீதையும் பேக்கர் வான்ஸும் :விமர்சனம்

தி லெஜண்ட் ஆஃப் பேக்கர் வான்ஸ்



உலகத்தில் உள்ள எல்லாக் கதைகளுமே நம்முடைய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரத்தில் அடங்கிவிடும் என்று எதிலோ படித்த ஞாபகம்.பகவத் கீதையில், அர்ஜுனனுக்கு கண்ணன் சாரதியாக இருந்து போருக்கு வழிநடத்தினான். வித்தை தெரிந்த ஒருவனுக்கு போரில் தக்க சமயத்தில் உபதேசம் செய்து வியூகங்களைச் சொல்லிக் கொடுத்தான். அதனால் தான் அர்ஜுனனால் வெல்ல முடிந்தது. உபதேசம் என்பது நாம் முடிவெடுக்க தடுமாறும் நேரத்தில், குழப்பமாக சோர்வுற்று இருக்கும் நேரத்தில் நமக்குத் தேவைப் படுகிறது. நமக்கும் வாழ்க்கையில் யாராவது வழிநடத்திச் சென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்?. நமக்கு வாழ்க்கையில் அப்படி யாரும் கிடைப்பதில்லை. குடும்பத்தில் இருப்பவர்கள், புத்தகங்களும், நண்பர்களும், சூழ்நிலையும் தான் நமக்கு வழிகாட்டிகள். வாழ்க்கைக்கே இப்படியென்றால் விளையாட்டில் ஊக்கப் படுத்துவதற்கு கண்டிப்பாக வழிகாட்டி அதாவது பயிற்சியாளரின் பங்கு மிக மிக முக்கியம். ஏனென்றால் விளையாட்டு தனி மனிதன், தெரு ,ஊர், நாடு கவுரவம்(Prestige) சம்பத்தப்பட்டது. தோல்வியென்பதை யார் தான் விரும்புவார்கள்?. இந்த படத்தில் கோல்ஃப் பேக்கை தூக்கும் கேடி(Caddy) ஒரு சாரதியாக வருகிறான். சரி பீடிகை போதும். விஷயத்திற்கு வருவோம்.

நல்ல படங்கள் சில காரணங்களினால் தோற்பதுண்டு. தமிழ் படங்களில் இதற்கு உதாரணம் பல உண்டு. ’இருவர்’ படம் எல்லோராலும் இன்றும் ரசிக்கும் படம். எம்.ஜி.ஆர், கருணாநிதி நட்பை இதை விட அழகாகவும், ஆழமாகவும் அதே சமயம் நாசூக்காவும் எப்படி சொல்லமுடியும். ஆனால் அந்த படம் வேண்டும் என்றே தோற்கடிக்கப் பட்டப் படம். குணாவும் அதே போல தான். ஹாலிவுட்டிலும் சில நல்ல படங்கள் கண்டு கொள்ளப் படாமலே வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் சென்று விடும். அப்படி பட்ட படங்களில் ஒன்று தான் இந்த “தி லெஜண்ட் ஆஃப் பேக்கர் வான்ஸ்”. இந்த படத்தை அமெரிக்கத் தொலைக் காட்சியில் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இன்று ஹாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களாய் இருக்கும் வில்-ஸ்மித்தும், மேட்-டேமனும் நடித்திருக்கிறார்கள். ஸ்டார்(கள்) வேல்யூ உள்ள படம். கதை மிக நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது. இருந்தும் ஏனோ இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் தான் இடம் பெறவில்லையே படம் நன்றாக இருக்குமோ இல்லையோ என்று நினைக்க வேண்டாம். பாக்ஸ் ஆபிஸ் என்பது வசூலை வைத்து தான் முடிவெடுக்கப் படுகிறது.

இந்த படத்தின் விமர்சனத்திற்கு போவதற்கு முன்னால் கோல்ஃப்(Golf) பற்றி ஒரு சின்ன முன்னோட்டம். இந்த விளையாட்டைப் பற்றி எனக்கும் அவ்வளவாகத் தெரியாது. கொஞ்சம் படித்து தெரிந்து கொண்டது தான். நான் போன பதிவில் சொன்னது போல இப்பொழுதெல்லாம் இது பணக்காரர்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டல்ல. வீடியோ கேம்ஸ் மூலம் நம் வீட்டிற்கே வந்துவிட்டது. கோல்ஃப் பற்றி தமிழில் சுருக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.

இந்தக் கதை, ஹார்டி க்ரீவ்ஸ்(ஜேக் லெம்மான்) அவனது ஊர் சவான்னா(Savannah)-ஜார்ஜியாவில் சிறுவயதில் பார்த்த சம்பவத்தை அவனுடைய வயதான காலத்தில் நினைத்துப் பார்த்துச் சொல்வது போல் எடுக்கப் பட்டிருக்கிறது. சவான்னாவின் பணக்காரர்களில் ஒருவர், ஒரு கோல்ஃப் விளையாட்டு மைதானம் கட்டுகிறார். அந்த நேரம் இரண்டாம் உலகப் போர் நடக்கிறது. அதனால் அவருடைய ஹோட்டலுக்கும், விளையாட்டு மைதானத்திற்கும் யாரும் வராததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை பண்ணிக் கொள்கிறார். கடன் கொடுத்தவர்கள் அவருடைய மகள் ஆடேலிடம்( சார்லைஸ் தியோரன்) அந்த விளையாட்டு மைதானத்தை விலை பேச, அடேலோ தானே அதை நடத்தப் போவதாகவும் கடனை கோல்ஃப் விளையாட்டுப் போட்டி ஒன்றை வைத்து அதில் வரும் தொகையை அவர்களுக்கு திருப்பிக் கொடுப்பதாகவும் சொல்கிறாள். அந்த போட்டியில் ஜெயித்தால் 10,000 டாலர்கள் தருவதாகவும் அறிவிக்கிறாள். போட்டிக்கு இரண்டு பெரிய வீரர்களை அவள் தேர்ந்தெடுக்கிறாள். முதலாவதாக பாபி-ஜோன்ஸ்(ஜோயல் - க்ரெட்ஷ்), அடுத்ததாக வால்ட்டர் ஹேகன் (ப்ரூஸ்-மெக்கில்). இருவரும் அமெரிக்காவில் பல முறை சாம்பியன் கோல்ஃப் விளையாட்டில் பட்டங்கள் வாங்கியவர்கள். சவான்னா மக்களோ அந்த ஊர் சார்பாக இன்னொருவரை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதில் யாரை விளையாட வைப்பது என்பதில் பலத்த குழப்பதிற்கு பிறகு ருனால்ஃப் ஜுனுவை(மேட்-டேமன்) தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஜுனு அடேலின் முன்னாள் காதலன். ஜுனு அவனது 16வது வயதிலே சவான்னா சார்பாக பல போட்டிகளில் விளையாடில் கோல்ஃபில் சாம்பியன் பட்டம் பெற்றவன். இரண்டாம் உலகப் போருக்காக அவனுக்கு ராணுவத்திலிருந்து அழைப்பு வந்து அவனும் ஐரோப்பாவிற்கு எதிராக போரிட சென்றான். சென்ற இடத்தில் அவனுடன் சென்ற அத்தனை வீரர்களும் இறந்துவிட அவன் மட்டும் தப்பிவிடுகிறான். தான் தோற்றுப் போனதால் சொந்த ஊருக்குச் செல்லாமல் பல வருடம் தலைமறைவாக இருந்துவிட்டு சவான்னாவிற்கு வருகிறான். அடேலும் ஜுனுவுக்காக பல வருடம் காத்திருந்து விட்டு அவனை மறந்துவிட்டாள்.அவன் கோல்ஃபை மறந்து மது அருந்துவதிலும், சீட்டாட்டத்திலும் அவனது வாழ்நாளைக் கழிக்கிறான்.சவான்னாவின் பெரியவர்கள் ஜுனுவிடம் ஊர் சார்பாக அந்த போட்டியில் கலந்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அவன் முதலில் மறுத்துவிடுகிறான். அடேலும் அவள் சார்பாக வந்து போட்டியில் கலந்து கொள்ள கெஞ்சுகிறாள். பலரின் வற்புறுத்தல் காரணமாக விளையாடிப் பார்க்கலாமா என்ற ஆசை அவனுள் எழுகிறது. தானே மறந்த ஒரு விஷயத்தை, இன்றும் ஞாபகம் வைத்து, தன் மேல் நம்பிக்கை வைத்து எல்லோரும் கேட்கும் போது விளையாடலாம் என்று முடிவு பண்ணுகிறான். அன்றிரவே அவனது கோல்ஃப் கம்பிகளை(Clubs) எடுத்து தன்னிடம் பழைய திறமை இருக்கிறதா என்று சோதனை செய்கிறான். அந்த நேரம் எங்கிருந்தோ பேக்கர் வான்ஸ்(வில்-ஸ்மித்) வருகிறான். தான் அவனுக்கு கேடி(Caddy) வேலைப் பார்ப்பதற்கு தயாராக இருப்பதாகவும்,அவனுக்கு ஒரு நாளைக்கு 5டாலர் சம்பளம் பொதும் என்றும் ஜுனுவிடம் கேட்கிறான். ஜுனு தான் எப்படி விளையாடப் போகிறேனோ என்று நம்பிக்கை இல்லாமல், தான் தோற்றால் தன்னால் எதுவும் கொடுக்க முடியாது என்றும் நம்பிக்கை இல்லாமல் சொல்கிறான். அதற்கு வான்ஸ் நீங்கள் உங்களுக்கான வீச்சை(Swing) மறந்து விட்டீர்கள் அதை தேடிக் கண்டு பிடித்துவிட்டால் நீங்கள் ஜெயித்துவிடலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறான். மறுநாள் போட்டி தொடங்குகிறது.

Vance: I hear you lost your swing. I guess we got to go find it.
Junuh: What'd you say?...
Vance: Well you lost your swing... We got to go find it... Now it's somewhere... in the harmony... of all that is... All that was... All that will be...

முதல் நாள் ஆட்டம். போட்டியைக் காண மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அடேலின் ஹோட்டலில் நாட்கணக்கில் தங்குகிறார்கள். இரு ஜாம்பவான்களும்(பாபி, வால்ட்டர்), ஜுனுவும் களத்தில் இறங்குகிறார்கள். போட்டி மூன்று நாட்கள் நடக்கிறது. போட்டியின் விதி முறைகள் மூவருக்கும் விளக்கப் படுகிறது. முதல் ரவுண்டில் ஜுனு மனம் போன போக்கில் பந்தை விளாசுகிறான். பந்து அங்கும், இங்கும் சென்று மணலில் புதைந்து, எடுக்க முடியாமல் தவித்து தன் மேலிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இழக்கிறான். பாபியும், வால்டரும் மிக நேர்த்தியாகவும், லாவகமாகவும் அடித்து சமமாக முன்னோக்கிப் போகிறார்கள். முதல் ரவுண்டின் முடிவில் மிகவும் பின் தங்கிய நிலையில் ஜுனு இருக்கிறான். அப்பொழுது தான் வான்ஸ் எந்தெந்த இடத்தில், எப்படியெல்லாம் ஜுனு தவறு செய்தான் என்பதை அவனுக்குச் சொல்கிறான். முதலில் ஏற்க மறுக்கும் ஜுனு பின்னால் தன் தவறை ஏற்றுக் கொள்கிறான். அன்றிரவு வான்ஸ் கூறும் அறிவுரை ஒன்றே ஒன்று தான்.

Vance: Yeah, I always felt a man's grip on his club just like a man's grip on his world...

இரண்டாம் நாள் ஆட்டம்.முதலில் வால்ட்டர் விளையாடுகிறார். அப்பொழுது ஜுனு வான்ஸிடம் இவ்வளவு தொலைவில் இருக்கும் டார்க்கெட்டை எப்படி அடைவது என்று கேட்கிறான். உடனே, அவன் இப்பொழுது பாபியைக் கவனி, அவன் பந்தை மைதானத்தில் வைத்துவிட்டு, டார்க்கெட்டை எப்படி எதிர் நோக்குகிறான் என்று கவனி. இப்பொழுது அவனது பார்வையில் டார்கெட்டைத் தவிர எதுவும் இல்லை. அவனது கையிலிருக்கும் ஸ்டிக்கினால் அவன் சில முறை ஒத்திகைப் பார்க்கிறான்.அதில் அவனது ஸ்விங்கைத் தேர்ந்தெடுத்து விட்டான். அது தான் அவனது தனிவீச்சு(Authentic Swing). அவன் தேர்ந்தெடுத்த ஸ்விங்கை இப்பொழுது உபயோகித்து டார்க்கெட்டை அடைய முயற்சி செய்வான் என்று கூறுகிறான். அவன் சொன்னது போலவே பாபி செய்கிறான். அதே முறையை ஜுனுவை உபயோகிக்க சொல்கிறான் வான்ஸ். இப்பொழுது ஜுனு கண்ணில் டார்கெட்டைத் தவிர வேறெதுவும் இல்லை(அர்ஜுனனுக்கு மரத்தின் மேலிருந்த கிளியைப் போல). இதன் ஆங்கில உரையாடலும்,ஒளியோட்டமும் பதிவின் கீழே இருக்கிறது.
மூன்றாம் நாள் ஆட்டம். சவான்னா மக்களுக்கு ஜுனு விளையாட்டின் மீது நம்பிக்கை பிறக்கிறது. வால்டருக்கும், பாபிக்கும் லேசாக பயம் தொற்றிக் கொள்கிறது. இடைவேளையின் போது வால்ட்டர் ஜுனுவிடம் பேரம் பேசுகிறார். தன்னை ஜெயிக்கவிட்டால் பரிசுத் தொகையில் 20% தரத் தயாராக இருப்பதாக கூறுகிறார். அதற்கு ஜுனு மறுத்து விடுகிறான். கொஞ்சம் நம்பிக்கை வந்தாலும் மனதில் போரில் தோற்ற நினைவுகள் வந்து அவனை சஞ்சலம் அடையச் செய்கிறது. மறுபடியும் வான்ஸ் அவனுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்கிறான். விளையாட்டில் ஈடுபட்டால் ஒரே மனதுடன் விளையாடும் படியாகவும், மனதில் ஜெயிப்பதில் மட்டுமே குறியாக இருக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு கட்டத்திலும் அவனது தனிவீச்சைப்(Authentic Swing)பயன்படுத்துமாறு வேண்டுகிறான். இதன் ஆங்கில உரையாடலும், ஒளியோட்டமும் பதிவின் கீழே இருக்கிறது.

நான்காம் நாள் ஆட்டம்: பாபி தான் விளையாடும் கடைசி விளையாட்டு என்றும், இதற்கு பிறகு வியாபாரத்தையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கப் போவதாகவும் ஜுனுவிடம் ட்ரெஸ்ஸிங் அரையில் தன் மேல் இரக்கம் கொள்ளவேண்டும் என்பதற்காக சொல்கிறான். அதற்கு ஜுனு விளையாட்டு என்று வந்த பிறகு இதெல்லாம் தான் பார்ப்பதில்லை என்று பதில் கூறுகிறான். கடைசியில் வான்ஸின் வியூகங்களை ஜுனு பிடிவாதமாக புறக்கணித்ததால், வான்ஸ் கேடி பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறான். ஜுனு போட்டியில் வென்றானா? அடேலின் காதலை ஏற்றுக் கொண்டானா? போட்டியின் முடிவில் அவனுக்கு என்ன சிக்கல் வந்தது? என்பதை டிவீடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

உரையாடல்களும், ஒளியோட்டங்களும்

Bagger Vance: Put your eyes on Bobby Jones... Look at his practice swing, almost like he's searchin for something... Then he finds it... Watch how he settle himself right into the middle of it, feel that focus... He got a lot of shots he could choose from... Duffs and tops and skulls, there's only ONE shot that's in perfect harmony with the field... One shot that's his, authentic shot, and that shot is gonna choose him... There's a perfect shot out there tryin' to find each and every one of us... All we got to do is get ourselves out of its way, to let it choose us... Can't see that flag as some dragon you got to slay... You got to look with soft eyes... See the place where the tides and the seasons and the turnin' of the Earth, all come together... where everything that is, becomes one... You got to seek that place with your soul Junuh... Seek it with your hands don't think about it... Feel it... Your hands is wiser than your head ever gonna be... Now I can't take you there Junuh... Just hopes I can help you find a way... Just you... that ball... that flag... and all you are...


Bagger Vance: You got a choice... You can stop... Or you can start...
Rannulph Junuh: Start?
Rannulph Junuh: Where?
Bagger Vance: Right back to wehre you always been... and then stand there... Still... real still... And remember...
Rannulph Junuh: It's too long ago...
Bagger Vance: Oh no sir it was just a moment ago... Time for you to come on out the shadows Junuh... Time for you to choose...
Rannulph Junuh: I can't...
Bagger Vance: Yes you can... but you ain't alone... I"m right here with ya... I've been here all along... Now play the game... Your game... The one that only you was meant to play... Then one that was given to you when you come into this world... You ready?... Stike that ball Junuh don't hold nothin back give it everything... Now's the time... Let yourself remember... Remember YOUR swing... That's right Junuh, settle yourself... Let's go... Now is the time, Junuh...


Vance: Yep... Inside each and every one of us is one true authentic swing... Somethin' we was born with... Somethin' that's ours and ours alone... Somethin' that can't be taught to ya or learned... Somethin' that got to be remembered... Over time the world can, rob us of that swing... It get buried inside us under all our wouldas and couldas and shouldas... Some folk even forget what their swing was like...

Vance: Yeah the rythm of the game just like the rythm of life...

18 comments:

Uthamaputhra Purushotham said...

அருமையான படம். வாழ்க்கைப் பாடத்தை இதை விட அழகாகச் சொல்லிவிட முடியாது. வாழ்க்கைக்கே நம்பிக்கை தரும் படம்.

விமரிசனம் மூலம் அறியத் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.

Thenammai Lakshmanan said...

வில் ஸ்மித் எனக்குப் பிடித்த நடிகர் கோபி கட்டாயம் பார்ர்கிறேன்

geethappriyan said...

அருமை நண்பர் கோபிநாத்,
என்னமாய் எழுதியுள்ளீர்கள்.
விளையாட்டு சம்பந்தமான நேர்முக வர்ணனைகளை தொகுப்பது மிகவும் கடினம்,அதை எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்.
=============
வில்ஸ்மித்தும் மேட்டெமானும் மிக அருமையான நடிகர்கள்
மேட்டெமானின்
பார்ன் சீரிஸ் நீங்களாக
ஸ்டக் ஆன் யூ
குட்வில் ஹண்டிங்
டாக்மா
இன்விக்டஸ்
என் ஃபேவரிட்.

வில்ஸ்மித் பெர்ச்யூட் ஆஃப் ஹாப்பினெஸ்
அலி
செவன் பவுண்ட்ஸ்
ஐயம் லெஜென்ட்
என் ஃபேவரிட்.
நல்ல படம் என்பது ந்ன்றாக ஓடியிருக்கனும் என்பது கட்டாயமல்ல.
பகிர்வுக்கு நன்றி.
தல் ஹாலிவுட்பாலாவிடம் இதை பார்க்க சொல்கிறேன்.நிறைய பேர் பார்ப்பார்கள்,நீங்கள் த்ரீ டிபேடர்ஸும் நன்றாய் எழுதியிருந்தீர்கள்.

geethappriyan said...

இதே போல ஓடாமல் போன இன்னொரு நல்ல படம் த அல்டிமேட் கிஃப்ட்,முடிந்தால் பார்க்கவும்

ஹேமா said...

கோபி,நிறைவா அழகா நிறையவே எழுதுறீங்க இப்பவெல்லாம்.நல்ல தமிழ்ச்சொற்களும் இருக்கு.பாராட்டுக்கள் கோபி.

நிறைவான விமர்சனம்.படத்தைப் பார்க்கவேணும் என்கிற உற்சாகம் தருது.நன்றி.

Muhil said...

கோபி...

விமர்சனம் பலரும் எழுதலாம். விமர்சிக்கும் பார்வையில் வாழ்வியல், உன்னதமான அறிவுச் செறிவு, பண்பாட்டு திறனின் அம்சங்கள் வாயிலான தொடர்பு, உலக ரீதியான மனோபாவம், கலாரசனை போன்றவற்றுடன் தெளிவும் தேவை. அது கலாச்சாரம், பண்பாடு எதுவாயிருந்தாலும் தத்துவ மகத்துவம் எல்லாருக்கும் ஒன்றுதான் என்று கீதையையும் இனைத்துப் பார்த்த விதம் நன்று. எழுத்து அகத்தின் ப்ரதிபலிப்பு. வாழ்க...வளர்க! ....முகில்.

Menaga Sathia said...

எவ்வளவு அழகா நேர்த்தியா விமர்சனம் எழுதிருக்கிங்க.பாராட்டுக்கள் சகோ!!.ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்த உணர்வு வருது...

கண்ணா.. said...

நண்பர் கார்த்தி கொடுத்த லிங்கில் இங்கு வந்து பார்த்தால்...என்னமா எழுதியிருக்கீங்க....

கலக்கல் தல..

அதுவும் கடைசி அந்த உரையாடல்களும் ஓளியோட்ட்மும் மிக மிக அருமை..

அண்ணாமலையான் said...

very gud writing...

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி உத்தமபுத்ரா அவர்களே. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

@ நன்றி தேனம்மை. வில்ஸ்மித் எனக்கும் பிடித்த நடிகர். பர்ஷூட் ஆஃப் ஹெப்பினஸில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

@ நன்றி கார்த்திக்கேயன். நான் சாதாரணமாகத் தான் எழுதியிருக்கிறேன். உங்களுடைய எழுத்து மற்றும் ஜாக்கிசேகரின் எழுத்தின் பாதிப்பு என்னுடைய எழுத்தில் இருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் படங்களில் சில படங்கள் தான் பார்த்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் மற்றதையெல்லாம் பார்த்துவிடுகிறேன். வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்கேயன். இந்த ஊக்கம் தான் என்னை எழுத வைக்கிறது.

@ நன்றி ஹேமா.கண்டிப்பாக இந்த படம் பாருங்கள்.உங்களுக்குப் பிடிக்கும். வாழ்த்துக்கு நன்றி ஹேமா.

@ நன்றி முகில். எந்த கதையைப்(படத்தைப்) பார்த்தாலும் நம்முடைய கலாச்சார கண்களுடன் தான் பார்க்க வேண்டியிருக்கு. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

@ நன்றி மேனகா. இந்த விமர்சனத்தை எழுதுவதற்கு முன்னால் இதை(படத்தை)யாரும் ரசிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. பின்னூடங்களைப் பார்க்கும் பொழுது தான் நம்பிக்கை பிறக்கிறது. வாழ்த்துக்கு நன்றி.

@ நன்றி கண்ணா. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

@ நன்றி அண்ணாமலையான். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

பாலா said...

கார்த்திக்கேயன் ரெஃபரன்ஸில் வந்தால்... அட... நம்ம ”க்யூப்” பதிவர்!! :) :)

---

தல... நானும் இந்தப் படத்தை பார்த்திருக்கேன். TBS-ன்னு நினைக்கிறேன். சரியா?

படம் வெற்றியடையாம போனதுக்கு... ‘கோல்ஃப்’ ஒரு பணக்கார விளையாட்டா இருப்பதால் இருக்கலாம்.

அல்லது அமெரிக்கன் ஃபுட்பால் மாதிரி விறுவிறுப்பு இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

இது ஆஹா ஓஹோ டைப் படம்னு சொல்ல மாட்டேன். பார்க்கும் சூழ்நிலையைப் பொறுத்து படம் ஒரு பாதிப்பைத் தரலாம்.

நல்லப் படங்கள் தோற்பது புதுசா என்ன??! :) :)
---

(நமக்கு ஒரு 4.30 மணி நேரப் பயணம் தான் இடையில். எப்பவாவது.. ஜாக்ஸன்வில் வந்தீங்கன்னா.. சொல்லுங்க தல. மீட் பண்ணுவோம்!! :))

மரா said...

கார்த்திகேயன் சொன்னாரு இந்த பிளாக் பத்தி.
அருமையானப் பதிவு.படத்தைப் பார்க்கனும்கிற ஆர்வத்தைத் தூண்டும் எழுத்து.வாழ்த்துக்கள் நண்பரே.

M.S.R. கோபிநாத் said...

@ வாங்க ஹாலிவுட் பாலா. க்யூப் வாங்கி விளையாடிப் பார்த்தீர்களா? TBSலோ Foxலோ பார்த்தேன். நீங்கள் சொன்னக் காரணங்களினாலும் படம் ஓடாமலிருந்திருக்கும். கண்டிப்பாக அடுத்த தடவை ஆர்லேண்டோ போகும் போது ஜாக்ஸன்வில் வருகிறேன். நீங்களும் அட்லாண்டா பக்கம் வந்தால் கண்டிப்பாக இங்கே வாருங்கள். வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

@ நன்றி மயில்ராவணன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

இளமுருகன் said...

ஒரு படம் வெற்றிஅடையாததிற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்,ஆனால் அது சொல்ல வந்த கருத்து ஆயிரம் காலம் நிலைத்து நிற்கும்.இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.அறிமுக படுத்தியதற்கு நன்றி.(எனக்கு தமிளிஷ்ல் ஓட்டு போட்டதற்கும் நன்றி)

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி இளமுருகன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

RAGUNATHAN said...

விமர்சனம் அருமை சார்...வில் ஸ்மித் நடித்த pursuit of happiness பார்த்தீர்களா?

முக்கோணம் said...

இது தாங்க விமர்சனம்..கலக்கி விட்டீர்கள்..! மிகவும் சுவைத்துப் படித்தேன். இந்தப் படம் வெற்றியடையாதது ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல், தமிழில் இந்தப் படம் எப்படி ஓடியது என்று ஆச்சரியப்பட வைத்த படங்களும் நிறைய உண்டு. தொடரட்டும் உங்கள் எழுத்து சேவை..!

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி ரகுநாதன். pursuit of happiness நிறைய தடவை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தப் படம்.

@ நன்றி முக்கோணம். வாழ்த்துக்கும் நன்றி.