Thursday, September 24, 2009

வெயிலோடு உறவாடி....


வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி, ஆட்டம் போட்டோமே

நாம் எத்தனையோ பாடல்களை அனுதினமும் கேட்கிறோம். சில பாடல்கள் நம் நெஞ்சை வருடுவதோடு மட்டுமில்லாமல் நம்மை நம்முடைய பழைய நினைவுகளுக்குள் கொண்டு செல்லும். அப்படி நான் ரசித்த பாடல் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி" என்று வெயில் படத்தில் வந்த பாடல். இதை எழுதியவர் நா.முத்துக்குமார். இயக்கம் வசந்த பாலன். இசை G.V.பிரகாஷ்.

நம்மில் பலபேருக்கு சிறுவயதில் வெயிலில் விளையாடி பெற்றோர்களிடம் அடியும், திட்டும் வாங்கிய அனுபவம் இன்னும் மனதில் இருக்கும். ஆனாலும் மறுபடியும் வெயிலில் விளையாடி, நண்பர்களோடு வெயில் சுற்றி வந்த நாட்களை மறக்க முடியுமா?. அந்த நாட்கள் இன்னும் பசுமரத்து ஆணியாக நம் நெஞ்சில் பதிந்திருக்கும். அந்த நாட்களை ஒரு நிமிஷம் நினைவுபடுத்தும் பாடல் தான் இந்த பாடல்.

நண்டூரும் நரி ஊரும் ,கருவேலங் காட்டோரம் , தட்டானைச் சுத்தி சுத்தி ,வட்டம் போட்டோமே


கிராமத்தில் வளர்ந்தவர்க்கும், நகரத்தில் வளர்ந்தவர்க்கும் இந்த வெயில் அனுபவம் தனித்தனியாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக அந்த இளமை பருவத்தில் வெயில் நண்பனோடு வளர்ந்த அனுபவம் ஒன்றாக தான் இருக்கும். அந்த வெயில் நாம் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் நண்பனாக சேர்த்து விளையாடுவோமே. குழந்தை பருவம் தான் எத்தனை அழகானது. நமக்கு யாரோடும் பகை இல்லை. வெயிலோடும் விளையாடித்தானே வளர்ந்திருக்கிறோம்.

பசி வந்தா குருவி முட்டை , தண்ணிக்கு தேவன் குட்டை , பறிப்போமே சோளத்தடடை ,புழுதி தான் நம்ம சட்டை

உடல் தான் வெயிலை வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் மனம் இன்னும் வெயிலை விரும்பத்தான் செய்கிறது. சிறு வயதில் எனக்கும் வெயிலுக்கும் இருந்த உறவில் என்னை ஒருமுறை கூட சுட்டது தெரியவில்லை. உனக்கு நான் வேண்டாம் என்றால் எனக்கு நீ வேண்டாம் என்று சொல்வது போல் இன்று சுட்டெரிக்கிறது. அதை என்னால் உணர முடிகிறது.

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம், வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம், தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம், தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்.

இன்றும் எனக்கு நினைவிருக்கிறது, வெப்பங்கொட்டையை ரெண்டாக உடைத்து அதில் ஒரு பாதியை கையின் முட்டியை மடக்கி அதன் மேல் நடுவில் வைக்க நண்பன் அதை ஓங்கி அடிக்க கையை பத்து முறை சுற்றவேண்டும். அப்படி சுற்றினால் பலம் வரும் என்பது குருட்டு நம்பிக்கை. இதை பள்ளி கூடத்தில் பல முறை செய்தது நினைவிருக்கிறது.

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே,கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்,அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச,பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

மேலுள்ள வரிகளில் சொல்லியது போல பரோட்டாவுக்கு சொத்தை அழித்ததை விட நெகடிவ்ற்கும்,லென்சுகும் சொத்தை அழித்தது தான் ஜாஸ்தி.

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்,ஓட்டம் போட்டு திரிஞ்சோம்,வெயிலத் தவிர வாழ்க்கையில,வேற என்ன அறிஞ்சோம்


தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்.
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

இந்த வரிகள் எல்லாம் பழைய நினைவுகளை சிறிது ஞாபகபடுத்திப் போகும்.இன்றும் இளையராஜாவின் பாட்டுக்கள் நம் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்க காரணம் அந்த பாடல்களோடு நாம் வளர்ந்ததால். பழைய பாடல்கள் கேட்கும் போது நம் நினைவுகளை சிறிது பின்னோக்கி பார்ப்போம். அந்த காலம் நமக்கு மறுபடியும் வாராதா என்ற ஏக்கமும் வந்து போகும்.

மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கிறேன். உங்களுக்காக அந்த பாடலின் திரை வடிவத்தை High Definition இல் இங்கே ...



2 comments:

Ramesh L said...
This comment has been removed by the author.
Ramesh L said...

It is really interesting and taking to me in the old days.